Tuesday, April 6, 2010

யாழி நிலம்

யாளி கூறும் புனைகதைகளால்
கை நழுவி
இமை மூடும் கணத்திற்குள்
உடைந்துவிடுகிறது என் வனம்.

பதறிய உணர்வில்
சிதறிய வனத்தை இரு கைகளாலும்
அள்ளி ஒன்று சேர்க்க
நீர் மருதுவின் தோல் சுருக்கங்கள்
வலது கையைக் கிழித்து
பெருந் தாகத்துடன் பருகுகிறது
அதனுயிர் குளிர எனதுயிரை.

கல்லோடையில் உருளும் பாறைகளில்
மாட்டிக்கொண்ட யாளிகள்
தனது கூர் நகங்களை தொலைத்திட
அவைகளை மெல்ல வருடி
வளர்ப்பு மிருகமென
எனது மடியில் வெப்பமூட்ட
தன் சிறகு விரித்து சட்டென பறந்து செல்கிறது

மறதிக்காரனின் தேடல் பாதைகள்

துமிகளுக்குள் திரிந்திடும்
கனவின் பேய்கள் பிடுங்கியோடுகிறது
ஞாபகத்தின் நாடு நிசிக்குள்
என் ஆழ் துக்கங்களை ...

காமம் நிரம்பிடும்
கனவின் வியர்வைகளில்
உருக்கொள்கிறது
பயம் மற்றும் பயங்கள்....


இரவின் பாதைகளில்
சிதறிய எலும்புகளில்
கசியும் மாதக்குருதியால்
மறத்தல் பற்றிய குறிப்புகளைத் தேடியலைகிறேன்
மயானத்தின் மௌன ஜாமங்களுக்குள்...

முதல் ஜாமம்
*கசிந்திடும் பேனாவின் நீல ரேகைகளில்
* தொலைந்த துணைக் காலின் சுட்டு விரலில்
* கனவுகளழித்த ரப்பரில் படர்ந்த பிழைகளில்


நாடு ஜாமம்
* மூட்டைகள் பதுங்கும் உதிர்ந்த சுவரின் இடுக்குகளில்
* நசுக்கப்பட்ட பேண்களின் விரல் நகங்களில்
* பகலைக் கூறுபோடும் ஜன்னல் கம்பிகளின் இரவுகளில்

கடை ஜாமம்
* கிழிக்கப்பட்ட துணிகளில்
* இரண்டாம் நாள் குருதிக் கவளங்களில்

தோழி!
ஒவ்வொரு புணர்வின் உச்சத்திலும்
காணாமல் போய் விடுகிறது
நமது ஓர்மை

காமத்தின் தேடல்களில்
நாம்
கனவுகொள் பேய்களாகிறோம்.
ஆம்
காமம்கொள் பேய்களாகிறோம் .

Friday, April 2, 2010

வடிவத்திற்குள் மறைபவர்கள்

அங்கங்களை நட்சத்திரமாக்கி
உறைந்து கிடக்கும் எனதருகில்
குருதி மிதக்கிறது
புனித யோனியாய்...

சுழியின் விளிம்புகளில்
சயனம் கலைந்த கனசதுரமாய்
யார் யாரோ தூக்கி ஓடுகின்றனர்
எனை .....
நானும் ஓடுகின்றேன்
அவர்களுடன்...

கனசதுரம் கனசெவ்வகமாய் மாற
யார் யாரோ துரத்துகிறார்கள்
எனை ...
நானும் துரத்துகிறேன்
அவர்களுடன் ...


மரண பயம் கருதி
கவனமாக ஒளிகிறேன்
எனக்குள்.
எனக்குள் ஏற்கனவே மறைந்திருக்கும்
எனைப்போலோருவனை
என்னிருத்தல் காரணமாய்
யாரோ ஒருவனால் எனக்கு சுடவிருந்த
பெயரின் முதல் எழுத்தில்
சில சொற்கள் எடுத்து
அவனின் மார்பினில் அழுத்துகிறேன்
கேவலின் ரணமொழுக துடித்திடும் என்னில்
உயிரை கையில் பிடித்து
குருதி சிந்த விழுகிறான்
கோள வடிவ சூத்திரத்திற்க்குள்....


காமம் -இயலாமை -துயரம்
ஆகியவற்றின் நீண்ட விவாதங்களிடையே
அழுக்கடைந்த யோனிக்குள்
கருவறைக் குழந்தையாய்
மிதந்து கொண்டிருக்கிறேன் நட்சத்திரமாக ...


பசிக்கு
சில
குருதிக் கவளங்களுடன்.......

Friday, March 26, 2010

வில்லியம் பிளாக்கின் கணித நிர்வாணம்

பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்றான்
மது போதையில் ப்ளாக்

உன் இறந்த கால கண்ணாடியின்
புதை படிவங்களில் சிக்கிய என் ரேகைகளை
மீட்டுத் தர முடியுமா என்றேன்
அவனின் பச்சை இரவுக்குள் .

கணித இரவின் பாறைகள்
தாங்கள் சூடிய ஒப்பனைத் தாவரங்களை
சரிசெய்தவாரே
ஒரு மீயொலியைப் போல
எவ்வித பயமுமற்று
என்னிடம் சொன்னது
பிரபஞ்சத்தின் இரவு தனிமையானது என்று .


ஒப்பனை இரவின் லிபிகளில் கசிந்த குருதியை
ஆடையென உடுத்தி
நியூட்டனின் சுருள் முடிகள்
சர்ப்பமாய் மாறக் கூடும் என்ற
பாறைகளின் விழிப் பயத்தை
நான் களவாடும் தருணம்
அவனின் பரி நிர்வாணம்
என் கண்களைக் கூச வைக்கிறது .


அந்தக் கணிதவியல் அறிஞனின்
உடல் திரட்சியை குறிப்பெடுத்துக் கொண்ட
ஒரு வினோத ஜந்து
பாறை இடுக்குகளின் இரவிற்குள்
மெல்ல நகர்கிறது
எனது சுண்டு விரல் பிடித்து ...

நேற்றைய பொழுதின் பகலை இரண்டாய்க் கிழித்து
ஒன்றில் எனது நிர்வாணத்தையும்
மற்றொன்றில்
இப்பிரபஞ்ச தனிமையினை
முக்கோணமாய் வரைந்து நியூட்டன் இறந்து விட

வரப் போகும் பகலுக்கான
சித்திரக் குறிப்புகளைத் தொலைத்த
விலங்கின் கூர் நகங் கொண்ட
அவனின் பிரதி பிம்பம்

என்னைத் தலை கீழான மதுக் குடுவையெனவும்
இரவின் நிர்வாணத்தை அரை வட்டமாகவும் மாற்றியது
மிகவும் தற்காலிகமானது தான்

இன்றைய இரவின் தனிமையைப் போல ....

காம வனம்

எதிர்பாராமல் கிடைத்த முத்தமொன்றை
எனதான வனத்தின் கிழட்டு மரங்களுக்குள்
பதுக்கி வைக்க

தனிமையான வெளியொன்றில்
கவனமாக நிர்ணயிக்கப்படுகிறது
எங்களது புணர்வு .

தீர்மானிக்கப்பட்ட எல்லைகளுக்குள்
திளைத்திடும் நான்
காமத்தின் மெழுகில்
நீல நிற நெற்றிப்பொட்டாய் எரிகிறேன்.

ஏக்கத்தின் கண்ணீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
பிரபஞ்சமாய் மிளிர்ந்திட
வனத்தின் இலைகள்
எதிர்பார்த்து கிடைக்காமல் போன
அவளின் மகரந்த முத்தங்களை
விவாதிக்கின்றன
தீவிரமாக ....

முத்தங்களை மண்புழுவாக்கி
அவளின் மேனியில் நகர்த்துகையில்
ரோமக்கால்கள் தோறும்
மறவாமல் தோன்றுகின்றன
காமத்தின் திரவங்கள் ...

விரல்களில் கசிந்திடும் காமம்
உடலில் அலையென ததும்பிட
மரத்தின் சிலிர்ப்புகளில்
பழுத்த இலைகள் பிரியும் ப்ரியமற்று
உதிர்கின்றன
எண்ணற்ற முத்தங்களை சுமந்து ....

முத்தங்கள் சுமையாகும் பட்சம்
வனத்தின் பாதைகள் தோறும்
நான் ..............அவளாக ;
அவள் ................................................
..............................................................
.........................................சர்ப்பமாக

Thursday, March 18, 2010

கதைபூமி

நாடகம் : கதை பூமி
இடம் : தேனி
இயக்கம் : பேய்க்காமன்
கதை : ச.முருக பூபதி